கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உள்ள ஒருங்குமுறை விற்பனை கூடங்களில் வருகிற ஏப்ரல் 22ம் தேதி வரை துவரை கிலோ ஒன்றிற்கு ₹58 என கொள்முதல் செய்யப்படும் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பு 2019-20ம் ஆண்டு காரீப் பருவத்தில் பயறு வகை விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8152 ஹெக்டேர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டு, துவரை அறுவடை பணி தற்போது துவங்கப்பட்டு வரும் நிலையில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், தர்மபுரி விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக துவரை கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக 200 டன், போச்சம்பள்ளி விற்பனை கூடம் மூலம் 400 டன், ஓசூர் விற்பனை கூடம் மூலம் 250 டன், ராயக்கோட்டை விற்பனை கூடம் மூலம் 250 டன் என மாவட்டத்தில் மொத்தம் 1100 டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது.