பொள்ளாச்சி, பிப். 12: பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை அருகே ஆயிரங்கால்குன்று பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நள்ளிரவில் புகுந்த 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று, அங்கு இருந்த ஒரு கன்று குட்டி, 5 ஆடுகளை வேட்டையாடி சென்றது. இதனால் அப்பகுதியினர் பீதியடைந்தனர். இதையடுத்து புலியை கண்காணிக்க வனத்துறையினர் அந்த தோட்டத்தில் கேமரா பொருத்தினர். கண்காணிப்பு கேமராவில், மீண்டும் தோட்டத்திற்குள் புலி வந்து சென்றது உறுதியானது. இதனால் புலியை பிடிக்க கடந்த 1ம் தேதி கூண்டு வைக்கப்பட்டது. சுமார் 5 அடி உயரமுள்ள அந்த கூண்டில் உள்ளேயும், வெளியேயும் மாமிசம் போடப்பட்டது. வெவ்வேறு நாட்களில் நள்ளிரவில் தோட்டத்துக்கு வந்த புலியானது, கூண்டின் வெளியே கிடந்த இறைச்சியை ருசித்துவிட்டு அப்படியே திரும்பி சென்றது. இதனால் கூண்டிற்குள் புலி சிக்காததால், வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர்.