நெய்வேலி, பிப். 11:நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக புதிய என்எல்சி அதிபர், ஒரு குழு அமைத்து அனைத்து ஒப்பந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்களான சிஐடியு, தொமுச ஆகிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இப்பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்பட்டதால் அனைத்து ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்திருந்தனர். நேற்று முன்தினம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், அனைத்து ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் என்எல்சி செயல் இயக்குனர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக 10 நாட்கள் கால அவகாசம் கேட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் நேற்று நடைபெற இருந்த போராட்டத்தை ஒத்திவைத்தனர்.