கோபி, பிப்.7: இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கோபியில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் 96வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட மாநில பொருளாளர் தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு கொண்டு வந்த 15 அம்ச திட்டத்தில் ஒன்றுகூட விவசாயிகளுக்கு பயன்தராது. மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, விவசாயிகளையும், மின்வாரிய அதிகாரிகளையும் அழைத்து பேசினார். அப்போது, இலவசமாக தண்ணீர் வழங்கினால்தான் விளைபொருட்களை குறைந்த விலைக்கு விற்க முடியும் என்று கூறியதையடுத்து உடனடியாக இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார். இந்த மின்சாரத்தை 20 லட்சம் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதை சீர்குலைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 58 உயிர்களை பலி கொடுத்து பெற்றதுதான் இலவச மின்சாரம். இதை ரத்து செய்தால் தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம்.