கோபியில் வெயிலின் கொடுமை தாங்காமல் தலையில் வேப்ப இலைகளை வைத்து கொண்டு தடுப்பு சுவருக்கு வர்ணம் பூசும் தொழிலாளர்கள்

கோபி, ஏப்.28: வெயிலின் கொடுமை தாங்காமல் தலையில் வேப்ப மர இலைகளை கொத்தாக சொருகி வைத்து சாலை தடுப்புக்கு பெண் தொழிலாளர்கள் வர்ணம் பூசினர். ஆண்டு தோறும் வெயிலின் தாக்கம் சிறிது சிறிதாக அதிகரித்து வந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்திய அளவில் 110 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் மூன்றாவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்திலேயும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு, காவிரி ஆறு உள்ளிட்ட ஆறுகளும், பவானிசாகர், கொடிவேரி அணை, குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை, என பல்வேறு அணைகளும், காலிங்கராயன் அணைக்கட்டு, 1000க்கும் குளங்கள், ஏரிகள் என நீர்நிலைகள் அதிகமாக உள்ள மாவட்டமாக இருப்பதால் சுமார் 3 லட்சம் ஏக்கரில் விவசாயமும் நடைபெற்று வருகிறது.

இவ்வளவு நீர் நிலைகள் இருந்தும், இந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் தமிழக அளவில் வெப்பநலை அதிகமாக உள்ள மாவட்டமாக உருவானதற்கு காரணம் 30 கிலோ மீட்டர் தூர சாலை விரிவாக்க பணிகளுக்காக 3,500 க்கும் மேற்பட்ட சுமார் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டது தான். இந்நிலையில் கோபி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் ஓரளவு முடிவுற்ற நிலையில், சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தடுப்பு சுவரில் வெள்ளை வர்ணம் பூசும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. வர்ணம் பூசும் பணியில் பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். காலை 9 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில், வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

விவசாய கூலி வேலை செய்து வந்த இவர்களுக்கு தற்போது விவசாய வேலைகளும் கிடைக்காத நிலையில் இந்த வேலை செய்வதால் கிடைக்கும் கூலியை வைத்தே பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில், வேறு வழியில்லாமல் தலையில் வேப்ப மர இலைகளை கொத்தாக சொருகி வைத்து வேலை செய்து வருகின்றனர். பசுமையான வேப்ப மர இலைகளை தலையில் சொருகி வைத்தால் வெயிலின் தாக்கம் சிறிது குறைவாக இருப்பதாக தொழிலாளர்கள் கூறினர். சித்தோட்டில் இருந்து கோபி வரை உள்ள 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 100 ஆண்டுகள் பழமையான 3,500 க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், இதுவரை அதற்கு ஈடாக ஒரு மரம் கூட வளர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

வேப்ப மரம், புங்கமரம், ஆலமரம், அரச மரம் போன்ற நாட்டு மரங்கள் 5 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை குறைக்கும் என்பதால், சாலையோரம் பேவர் பிளாக் அமைக்காமல் மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோபியில் வெயிலின் கொடுமை தாங்காமல் தலையில் வேப்ப இலைகளை வைத்து கொண்டு தடுப்பு சுவருக்கு வர்ணம் பூசும் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: