ஈரோடு சத்தியமங்கலம் அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை

 

சத்தியமங்கலம், ஏப். 26: சத்தியங்கமலம் அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தற்போது, வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுகின்றன.

இந்நிலையில், நேற்று அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள காடகநல்லி மலை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் வனப்பகுதி சாலையில் சென்றபோது சாலையில் இரு தந்தங்களுடன் கூடிய கொம்பன் யானை நடமாடுவதை கண்டனர்.

யானை நடமாட்டத்தை கண்டு பஸ்சை நிறுத்தியதும் கொம்பன் யானை பஸ்சின் அருகே வந்து நகராமல் நின்றது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். அப்போது, பயணிகள் தங்களது செல்போன்களில் காட்டு யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் பஸ்சை வழிமறித்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஈரோடு சத்தியமங்கலம் அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை appeared first on Dinakaran.

Related Stories: