ஈரோடு தொகுதியில் 70.59 சதவீதம் வாக்குபதிவு

 

ஈரோடு,ஏப்.21: ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 70.54 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 2.13 சதவீதம் குறைந்துள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. நேற்று காலை வாக்குபதிவு தொடங்கியதும் மக்கள் விறுவிறுப்பாக வந்து வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 12.89 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

அதன்பிறகு 11 மணி நிலவரப்படி இரண்டு மடங்காக உயர்ந்து 28.29 சதவீதம் வாக்குகள் பதிவானது. பின்னர் மதியம் 1 மணி நிலவரப்படி 43.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. மதியத்திற்கு மேல் வாக்குபதிவு மெல்ல குறையத் தொடங்கியது. இறுதியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈரோடு தொகுதியில் 70.54 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்படி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 73.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 66.05 சதவீதமும், ஈரோடு மேற்கு 65.73 சதவீதம், மொடக்குறிச்சி 76.27, காங்கேயம் 71.63, தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 70.54 சதவீதம் வாக்குகள் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 70.59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 72.67 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் 70.59 சதவீதம் மட்டுமே பதிவாகி உள்ளது.  இதன் மூலம் கடந்த 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைவிட 2.13 சதவீதம் குறைந்துள்ளது. ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிகளை தவிர மற்ற 4 தொகுதிகளிலும் 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளது.

The post ஈரோடு தொகுதியில் 70.59 சதவீதம் வாக்குபதிவு appeared first on Dinakaran.

Related Stories: