திருப்பூர், ஜன.30:திருப்பூர் மாநகராட்சி 3வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி முன்னாள் கவுன்சிலர் மாரப்பன் தலைமையில், பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் 1வது மண்டல அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கமிஷனர் வாசுக்குமாரிடம் வழங்கினர். அந்த மனுவில், இந்திரா நகரில் வடிகால் வசதி இல்லாததால், கழிவு நீர் ரோடுகளில் தேங்கி சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திரா நகர், சஞ்சீவி நகர், நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த 2வது திட்ட குடிநீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. மேலும், சாக்கடை, ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.