உடுமலை, மார்ச் 16: அமராவதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் தளிஞ்சி கிராமத்தில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளை திருப்பூர் மாவட்ட எஸ்பி கிரிஷ் யாதவ் நேற்று ஆய்வு செய்தார். தளிஞ்சி துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் மற்றும் அமராவதி ஒன்பதாவது செக்போஸ்டில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா? என ஆய்வு செய்தார்.
சின்னாறில் இருந்து தளிஞ்சி செல்லும் சாலையில், கூட்டாறை கடக்க பாலம் அமைக்க வேண்டும் என எஸ்பியிடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் உடுமலை காவல் நிலையம் மற்றும் அமராவதி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பணிகளின் முக்கியத்துவம் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.
