திருப்பூர், மார்ச் 13: திருப்பூர், பெருமாநல்லூர் சாலையில் ரோட்டில் போயம்பாளையம் முதல் பொம்மநாயக்கன்பாளையம் வரை இருபுறமும் ஆக்கிரமிப்பு கடை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரத்தினசாமி உத்தரவின்பேரில் நேற்று பெருமாநல்லூர் ரோடு போயம்பாளையம் முதல் பொம்மநாயக்கன்பாளையம் வரை ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் உதவி கோட்ட பொறியாளர் கவிதா உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
