கோவையில் இருந்து கேரளாவுக்கு 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

கோவை, ஜன.24:கோவையில் இருந்து கேரளாவுக்கு காரில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை ஆனைகட்டி பகுதியில் நேற்று காலை கோவை மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்பிரிவு போலீசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் உள்ள சீட்டுகளுக்கு அடியில் 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  விசாரணையில், கோவையில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்(27), முருகேசன்(56). ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு கோவை பூசாரிபாளையத்தில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: