பல்லாவரம், ஜன.24: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் கோவூர் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் நேற்று காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் புறப்பட்டது.இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனா். சேலத்தை சேர்ந்த டிரைவர் கருப்பண்ணன் (48), நாமக்கல்லை சேர்ந்த கண்டக்டர் ஜெயச்சந்திரன் (50) ஆகியோர் பணியில் இருந்தனர். நள்ளிரவு என்பதால் பயணிகள் அனைவரும் பாதி தூங்கியும், பாதி தூங்காத நிலையிலும் இருந்தனர். தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் நேற்று காலை பஸ் வந்து கொண்டிருந்தது.குன்றத்தூர் அடுத்த கோவூர் அருகே தரப்பாக்கம் என்ற பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு ஓடி, சாலை நடுவே உள்ள சென்டா் மீடியனை உடைத்துக் கொண்டு எதிர் திசை சாலையில் சென்று நின்றது. இதில் டிரைவர், கண்டக்டர், பயணி தங்கராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.