செங்கல்பட்டு, ஜன. 24: ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், வருவாய் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயி, கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். செங்கல்பட்டு தாலுகா கொங்கணாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிசை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது.செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட கொங்கணாஞ்சேரி கிராமத்தில் எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. அதில், பயிர் செய்து வருகிறோம். கடந்த 2005ம் ஆண்டு முதல் சிலர், எனது நிலத்துக்கு செல்லும் கால்வாய் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.இதனால், எனது நிலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை. கால்வாய் மூலம் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதைதொடந்து, கடந்த 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தேன்.