கடலூர், ஜன. 24: விரைவான அஞ்சல் சேவைக்காக ரயில்வே துறையுடன் இணைந்து அஞ்சல் துறை ஆர்எம்எஸ்களை இயக்கி வருகிறது. இவைகள் பெரும்பாலும் ரயில் நிலையங்களின் அருகிலேயே செயல்பட்டு வரும். மாலை 3 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் (சில இடங்களில் 24 மணி நேரமும்) செயல்படும் இந்த ஆர்எம்எஸ்களில் விரைவு அஞ்சல் புக்கிங் வசதியும் உள்ளது. இந்நிலையில், மாவட்ட தலைநகராக விளங்கும் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஆர்எம்எஸ் நிலையம் மற்றும் சிதம்பரத்திலுள்ள நிலையங்களை கடந்தாண்டில் மூடி விட்டு விருத்தாசலத்துடன் இணைக்கும் பணியை அஞ்சல்துறை மேற்கொண்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திருப்பாதிரிப்புலியூர் ஆர்எம்எஸ் மூடப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆர்எம்எஸ்கள் கடந்த 20ம் தேதி முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டன.