கடலூர் மாவட்டத்தில் 97 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கடலூர், ஜன. 14:   கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதல் செய்ய 97 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் அறிவிப்பு வருமாறு: நடப்பு சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் ஏறத்தாழ இரண்டரை லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை துவங்கி உள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 2019-20 கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 97 இடங்களில் முதல் கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தற்போது கடலூர் வட்டத்தில் 3 கிராமங்களிலும், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 3 கிராமங்களிலும், பண்ருட்டி வட்டத்தில் 1 கிராமத்திலும், புவனகிரி வட்டத்தில் 15 கிராமங்களிலும், வேப்பூர் வட்டத்தில் 4  கிராமங்களிலும், முஷ்ணம் வட்டத்தில் 18 கிராமங்கள்.

சிதம்பரம் வட்டத்தில் 12 கிராமங்களிலும், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 19  கிராமங்களிலும், திட்டக்குடி வட்டத்தில் 11 கிராமங்கள் மற்றும் விருத்தாசலம் வட்டத்தில் 11  கிராமங்களிலும் ஆக மொத்தம் 97 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளன. நடப்பு கொள்முதல் பருவத்திற்கு மத்திய அரசு சன்னரகத்திற்கு  அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1835-உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ. 70-ஐயும் சேர்த்து  மொத்தம் ரூ.1905 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இதே போன்று மத்திய அரசு சாதா ரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1815 -உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ.50-ஐயும் சேர்த்து மொத்தம் ரூ.1865 விவசாயிகளுக்கு வழங்கப்படும். எனவே சம்பா நெல் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை அருகிலுள்ள அரசு  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம். மேலும் விவசாயிகளின் கோரிக்கைபடி தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: