ஜெயங்கொண்டம், ஜன.14: ஜெயங்கொண்டம் பகுதியில் ஊதுபத்தி விற்பனை செய்து குடும்பத்தை காப்பாற்றும் பிஎட் வரை படித்த மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் ஜெயலட்சுமி இவர்களது மகன் பரமசிவம் (40). இவர் கடந்த 1980ம் வருடம் பிறந்து பிறவியிலேயே பார்வை இல்லாமல் மாற்றுத்திறனாளியாகவே பிறந்துள்ளார். இருந்தாலும் ரங்கநாதன் தனது மகனை மயிலாடுதுறையில் உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார். பரமசிவத்தின் படிப்பு அறிவு மென்மேலும் வளர துவங்கியது. இதனால் மகனை மேலும் படிக்க வைக்க வேண்டும் என்று கடன் வாங்கி மகனை திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்த்தார். இருந்தாலும் பரமசிவம் அப்போது உள்ள சூழ்நிலையில் பணம் இல்லாததால் உதவிக்கு யாரும் இல்லாததாலும் தானே முன்வந்து திருச்சியில் ஊதுபத்தியை விற்பனைக்காக வாங்கி மாலை நேரங்களில் விற்பனை செய்து படித்து முன்னுக்கு வந்தார். பிரில் எழுத்து மூலம் கடைசிவரை விடாமுயற்சியுடன் படித்து விட்டு எம்ஏ, எம்பில், பிஎட் முடித்தார்.