திருச்செந்தூர், ஜன.13: திருச்செந்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையம் சார்பில் திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு வைத்து நடந்த நிகழ்ச்சிக்கு, ஆர்டிஓ தனப்ரியா தலைமை வகித்து, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு வலம் வந்தனர். ஊர்வலத்தில் தேர்தல் தனித்துணை தாசில்தார் சுந்தரராகவன் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.