கயத்தாறு அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி

கயத்தாறு ஜன.13:கயத்தாறு அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலியானார். கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் பரமசிவன் மகன் ஈஸ்வரன் (37). இவருக்கு திருமணமாகி பத்திரகாளி என்ற மனைவியும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரன் கடந்த 8ம் தேதி இரவு தனது நண்பர் வெள்ளப்பாண்டி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கயத்தாறு அருகே உள்ள மேல இலந்தகுளத்திலிருந்து தனது மனைவி ஊரான உசிலங்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது உசிலங்குளம் ரோட்டில் அமைந்துள்ள பன்னிரூத்து விலக்கு அருகே எதிரே வந்துகொண்டிருந்த டிராக்டர் மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியதில் ஈஸ்வரனுக்கு பலத்த காயமும், வெள்ளப்பாண்டிக்கு கையில் சிறு காயமும் ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அதிகாலை இறந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த கயத்தாறு போலீசார், டிராக்டரை ஓட்டிவந்த பன்னீரூத்து ஆறுமுகம் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: