காரைக்குடி, ஜன.9: காரைக்குடி அருகே கல்லல் பட்டணம்பட்டி சாலையில் கிராவல் மட்டும் போட்டு விட்டு தார் அமைக்காமல் ஒரு வருடமாக கிடப்பில் போட்டுள்ளனர். காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியம் செவரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது எட்டுக்குடிபட்டி, பட்டணம்பட்டி. இங்கு 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லல் மற்றும் கூத்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். காரைக்குடி முதல் கல்லல் சாலையில் இருந்து எட்டுகுடிபட்டி, பட்டணம்பட்டி, வடஆவந்திபட்டி, ஒத்தகுடியிருப்பு நடுவிக்கோட்டை சாலை வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2019 பிப்ரவரியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க ரூ.54 லட்சத்து 93 ஆயிரம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. ஆமை வேகத்தில் நடந்த இப்பணியில் மக்களின் தொடர் கோரிக்கைக்கு பின் கிராவல் சாலை மட்டும் போட்டனர். அதன் பின்பு பணியை அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். பணி துவங்கி ஒரு வருடங்கள் ஆக உள்ள நிலையில் இதுவரை தார்ச்சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். சாலைகளில் ஆங்காங்கே கிடக்கும் கல் வாகனங்களை பதம்பார்ப்பது வாடிக்கையாகி வருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி காலம் கடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.