மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்: நகராட்சி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு

 

மானாமதுரை, ஏப். 21: மானாமதுரை வீரஅழகர்கோயில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியதை அடுத்து அழகருக்கு நகராட்சி அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. மானாமதுரை வீரஅழகர்கோயில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. வீரஅழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தபின் நகராட்சி நிர்வாகம் சார்பில் கோயிலில் இருந்து வீரஅழகர் மேளதாளங்களுடன் ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று மாலை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம் முன்னிலையில் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டபின் மண்டகப்படியில் பழைய தபால் ஆபீஸ்தெரு, செக்கடி தெரு, பட்டறை தெரு, காந்திநகர் பகுதிமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், நகர செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோருக்கு தேவஸ்தானம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் செக்கடி தெரு, பழைய தபால் ஆபிஸ்தெரு, கனகசபாபதி பிள்ளை தெரு, மாரியம்மன்கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், 27 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

The post மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்: நகராட்சி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: