உத்திரமேரூர், ஜன.3: உத்திரமேரூர் அருகே கிராம மக்கள் எதிர்ப்பை மீறி துவங்கப்பட்டுள்ள கல்குவாரியால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் கிராம மக்கள் கல்குவாரிக்கு தடைவிதிக்க கோரி முதல்வர், ஜனாதிபதிக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இல்லாவிட்டால், கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் அடுத்த பழவேறி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு தனியார் கல்குவாரிகள் இயங்குகின்றன. இந்த கல்குவாரிகள் அருகே கல்அரவை தொழிச்சாலைகளும் செயல்படுகின்றன. குவாரிகளில் பூமியில் இருந்து கற்கள் பெயர்த்தெடுக்க தினமும் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தபடுகின்றன. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்வு ஏற்பட்டு, கிராமங்களில் உள்ள வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்படுகிறது.