கோவை, டிச. 31: கோவை மேட்டுப்பாளையம் கோயில் யானைகள் முகாமில் உள்ள இரட்டை திருப்பதி யானை லட்சுமிக்கு சிறப்பு மருந்தாக புரோட்டீன் பவுடர் வழங்க கால்நடை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. இதில், தமிழகம், பாண்டிச்சேரியை சேர்ந்த மொத்தம் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இந்த யானைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஹெல்த் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யானையின் உடல் நலம் தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி முகாமில் பங்கேற்றுள்ள 28 யானைகளின் சானங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர், கோவையில் உள்ள கால்நடை ஆய்வகத்தில் சானங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளிவந்துள்ளது. அதன்மூலம் யானைகளுக்கு குடற்புழு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் எதுவும் இல்லை எனவும், அனைத்து யானைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.