தேவாரம், டிச. 18:தேவாரம் பகுதிகளில் நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் தண்ணீரில் ஏற்படக்கூடிய சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு வழங்காமல் வேளாண்மைபொறியியல்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், கருக்கோடை, பல்லவராயன்பட்டி, மேலசிந்தலைசேரி உள்ளிட்ட கிராமங்கள் தண்ணீர் அதிகம் இல்லாத வறண்ட பகுதியாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் பெய்யக்கூடிய பருவமழையினால் தேக்கப்படும் தண்ணீரின் மூலமாக கிணறுகளில் மோட்டார் போட்டு விவசாயம் நடக்கிறது. குறிப்பாக பீன்ஸ், வாழை, தக்காளி, முருங்கை, உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் நடக்கிறது. மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் கப்பை விவசாயம் நடக்கிறது. எனவே இப்பகுதிகளில் நுண்ணீர்பாசனம், மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்தல், தெளிப்புநீர் பாசனம், ஹைட்ரோஜெல், போன்றவை மிக அவசியமானதாக உள்ளது.