காளையார்கோவில், டிச. 13: காளையார்கோவில் அருகே நற்புதம் கிராமத்தில் ரேஷன்கடை அமைக்கவேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவில் அருகே சூசையப்பர்பட்டிணம், நற்புதம், குறுந்தணி ஆகிய கிராமங்களில் 650க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் உள்ளன. இந்த மூன்று கிராமத்திற்கும் ஒரு ரேஷன் கடை தான் உள்ளது. இதில் நற்புதம், குறுந்தணி கிராமமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூசையப்பர்பட்டிணம் கிராமத்திற்குச் செல்ல வேண்டும். அவ்வாறு பொருட்கள் வாங்குவதற்குச் செல்லும் பெண்களிடம் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்குத் தனியாகச் செல்லும் பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, நற்புததில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று 2 ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் மற்றும் தனி வட்டாட்சியரிடம் (குடிமை பொருள்) கிராமத்தினர் கையெழுத்திட்டு மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.