கோவை மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை, டிச. 13: கோவை வனக்கோட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. கோவை வனக்கோட்டம் 7 வனச்சரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தில் புலிகள், சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்கிறது. இந்நிலையில், வனவிலங்குகள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. இதில், புலிகள் எண்ணிக்கை குறித்து வனத்துறையினர் சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தினர். இதற்காக, வனப்பகுதியில் சுமார் 300 இடங்களில் சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கேமராவில் பதிவான புலிகளின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும், புலிகளின் கால் தடங்கள் மூலமாகவும் கணக்கெடுத்துள்ளனர். இதன் மூலம் கோவை வனக்கோட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.  

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை வனக்கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை தேசிய புலிகள் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட புலிகள் எண்ணிக்கை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தேசிய புலிகள் ஆணையம் வெளியிடும். இருப்பினும், கோவை வனக்கோட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலமாக கடந்த ஆண்டுகளை விட புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது,’’ என்றனர்.

Related Stories: