காஞ்சிபுரம், டிச.5: காஞ்சிபுரம் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் சாலை வழியாக தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுத களான ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை, ஏகனாம்பேட்டை, தாங்கி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் மற்றும் பைக்குகளில் ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பெரியார் நகரில் மழைநீர் தேங்கி சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அதேபோன்று காஞ்சிபுரத்தில் இருந்து பழைய ரயில் நிலையம் வழியாக வையாவூர், தருமநாயக்கன் பட்டறை, களியனூர், ஒழையூர், ராஜகுளம், சின்னையன் சத்திரம், சிறுவேடல், சேக்காங்குளம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வையாவூர் சாலை கோனேரிக்குப்பம் சுடுகாடு பகுதி, தனியார் பள்ளி திருப்பம், அசோக் நகர் ஆகிய பகுதிகள் படுமோசமாக மாறிவிட்டது. இதனால் அவ்வழியாக சென்று வரும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர்.