வேலூர், டிச.1: வேலூர் மத்திய சிறையில் முருகன் அறையில் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரை மூடி மறைக்க சிறை நிர்வாகம் முயற்சி செய்வது சிறை காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து ஆன்ட்ராய்டு செல்போனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் ஜேஎம்1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில், உயர் பாதுகாப்பு பிரிவில் 3வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த முருகன், செல்போன் பறிமுதல் எதிரொலியாக 2வது பிளாக்கிற்கு மாற்றப்பட்டார்.