திருச்செந்தூர், நவ. 20: திருச்செந்தூரில் பாரதியார் தெருவில் பெய்த தொடர் மழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் குடியிருப்புகள் மிதக்கும் அவலம் தொடர்கிறது. தேங்கிநிற்கும் மழை நீர் அகற்றப்படாததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் தொடர்ந்து பெய்த கனமழையால் பெருக்கெடுத்த தண்ணீர் தாழ்வான இடங்களில் தாழ்வாக நிற்கிறது. இதே போல் 20வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் தெருவில் பெய்த தொடர் மழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் குடியிருப்புகள் மிதக்கும் அவலம் தொடர்கிறது. இவ்வாறு தேங்கிநிற்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மழைநீர் பலநாட்களாக குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கிநிற்பதால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் சிரமப்படுகின்றனர். இதே போல் மாணவ, மாணவிகளும் பள்ளி செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில், கழிவுநீரும் கலப்பதால் அதில் உருவாகும் கொசுக்களால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நேரத்தில் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.