பழுதான கட்டிடத்தை இடித்து அகற்றுவதில் அதிகாரிகள் தாமதம்

பணகுடி, நவ. 8: பழவூர் அரசு பள்ளியில் பழுதான கட்டிடத்தை இடித்து அகற்றுவதில் பொதுப்பணித்துறையினர் தாமதம் செய்து வருவதால் வகுப்பறை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கின்றன. பணகுடி அருகே உள்ள பழவூர் அரசு மேல்நிலைப்பள்ளி 1968 - 69ல் நடுநிலைப்பள்ளியாகவும், 1970 -71ல் உயர்நிலைப்பள்ளியாகவும், 2007ல் கூடங்குளம் அணுமின் திட்டத்தில் இருந்து ரூ.2 லட்சம் வைப்புநிதியாக வைக்கப்பட்டு 2008-09ல் அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.மேலும் கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தர கூடங்குளம் அணுமின் நிலையம் நிதி ஒதுக்கவும் தயார் நிலையில் உள்ளது. இதன் முதல்படியாக அணுமின் நிலைய உயர்மட்ட அலுவலர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர். பள்ளி வளர்ச்சிக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளியில் உள்ள பழுதான கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த கடந்த 2018ம் ஆண்டு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டால் அதே இடத்தில் 2 அடுக்கு கட்டிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் கட்டிடம் காட்சியளிக்கிறது. எனவே பழுதான கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளி மேலாண்மை குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: