டாஸ்மாக் கடையை மூடக் கோரி நூதன போராட்டம்

நெல்லை, நவ. 8: திசையன்விளை டாஸ்மாக் கடையை மூடக் கோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் நூதன போராட்டம் நடந்தது.திசையன்விளை முருகேசபுரத்தில் டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும். 200 அடியில் அதே முருகேசபுரத்தில் ஏற்கெனவே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் பெந்தேகொஸ்தே சபை, சிஎஸ்ஐ ஆலயம், டாஸ்மாக்கில் இருந்து 100 அடி தூரத்தில் அரசு கதர் துணி உற்பத்தி நிலையம், அருகில் மருத்துவமனை ஆகியவை உள்ளது. திசையன்விளை பகுதியில் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி மற்றும் ஆங்கிலப் பள்ளிகள் அதிகமாக உள்ளன. திசையன்விளை தாலுகாவை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே முருகேசபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பதாகையுடன் தேசிய மது ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்த குட்டம் சிவாஜி முத்துகுமார் திடீர் போராட்டம் நடத்தினார். மதுக்கடையை மூடவில்லை எனில் திசையன்விளை காமராஜர் சிலை முன்பு பொதுமக்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருப்போம் என்றார். பின்னர் அவர் இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்தை சந்தித்து மனு அளித்தார்.

Related Stories: