தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.31க்குள் துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்

தூத்துக்குடி, நவ.7: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 545 பேர்கள் துப்பாக்கிகள் உரிமம் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் டிசம்பர் 31க்குள் துப்பாக்கிகளுக்கான உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1959ம் ஆண்டு இந்திய படைக்கலச் சட்டத்திற்குட்பட்டும், அதன் கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 2016ம் ஆண்டு படைக்கல விதிகளின்படியும், தூத்துக்குடி மாவட்டத்தில் படைக்கல உரிமத்தின் செயல்திறன் 31.12.2019டன் முடிவடையும் படைக்கல உரிமைதாரர்கள் தங்களது ஒற்றைக்குழல், இரட்டைக்குழல் துப்பாக்கி, எஸ்பிஎம்எல், டிபிஎம்எல், ரைபிள், ரிவால்வர் மற்றும் பிஸ்டல் உரிமங்களை 01.01.2020  முதல் 31.12.2022 வரையிலான மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் பொருட்டு வரும்  டிசம்பர் 31ம் தேதிக்குள் தூத்துக்குடி கலெக்டருக்கு உரிமத்துடன் அனுப்ப வேண்டும். புதுப்பிக்கும் படைக்கல உரிமத்திற்கு கீழ்க்கண்ட கட்டணத் தொகையினை “0055PoliceReceipts under Arms Act State என்ற தலைப்பின் கீழ் ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் செலுத்தி, விண்ணப்பத்தில் ரூ.2/- (ரூபாய் இரண்டு மட்டும்) மதிப்புடைய நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டி விண்ணப்பத்தோடு உரிமம், அசல் செலுத்துச் சீட்டு (செலான்) ஆகியவற்றை சேர்த்து அனுப்பவேண்டும்.

படைக்கலன் வகை மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்தல் கட்டணமாக பிஸ்டல், ரிவால்வர், .22 போர் ரைபிள் மற்றும் தோட்டா ரக துப்பாக்கிகள், நிரப்பு ரக துப்பாக்கி, Breech loading centre fire rifles ஆகிய துப்பாக்கிகளுக்கு ரூ.1500 செலுத்தவேண்டும். மற்றும் சென்டர் /பயர் ரைபிளுக்கு ரூ.3ஆயிரமும் துப்பாக்கிகளுக்கான லைசென்ஸ்களை வரும் 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  துப்பாக்கி லைசென்ஸ் வரும் 31.12.2019 உடன் முடிவடையும் உரிமதாரர்கள் 2019ம் ஆண்டு டிசம்பர் 31க்குள் தங்களது உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும். தவறினால் 2020 ஜன.1ம் தேதியன்று தன்னிடமுள்ள படைக்கலனை அருகிலிருக்கும் காவல் நிலையத்திலோ அல்லது படைக்கல காப்புக்கு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தினரிடமோ ஒப்படைத்து விடவேண்டும்.  அதிலும் தவறினால் சம்பந்தப்பட்ட உரிமம் வைத்திருப்பவர் மீது படைக்கலச் சட்ட விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  தாமதமாக பெறப்படும் மனுக்களின் பேரில் எவ்வித காரணம் கொண்டும் உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது.

புதுப்பித்தலுக்கு விண்ணப்பம் செய்யும் காலம் முடிய உரிமங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரால் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் நேரடி பரிசீலனைக்குப் பின் உரிமதாரருக்கு அத்தியாவசிய தேவையெனக் கருதப்படும் இனங்களில் புதுப்பித்து வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: