கோவை, நவ. 6: கோவை அரசு மருத்துவமனையில் உலக பக்கவாதம் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மருத்துவமனையின் டீன் அசோகன், புறநோயாளிகளுக்கு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக பக்கவாதம் தினம் அக்டோபர் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாதம் என்பது மாரடைப்புக்கு சமமானது. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு, ரத்தக்கசிவு ஏற்படுவதால் ஏற்படுகிறது. சர்க்கரை நோய், புகைப்பிடித்தல், அதிக கொழுப்பு, இதய நோய் காரணமாகவும் ஏற்படும். ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டவுடன் நிமிடத்திற்கு நிமிடம் மூளைக்கு செல்லும் லட்சக்கணக்கான செல்கள் அழியும். இதனால், கை,கால் செயல் இழப்பு, முகத்தில் பாதிப்பு, நடப்பதில் தடுமாற்றம், கண்பார்வை இழத்தல், பேசுவதில் சிக்கல் ஏற்படும்.