வாலாஜாபாத், நவ. 6: வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டையில் பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே நிரம்பி வழியும் குப்பை தொட்டியால், சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சியில், 1800க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு வங்கிகள், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற கட்டிடம், நடுநிலைப் பள்ளி, நூலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. முத்தியால்பேட்டையில் இருந்து களியனூர் செல்லும் சாலையை ஒட்டி நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்படுகின்றன. இந்த அங்கன்வாடி மையத்தை ஒட்டியே ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஒரு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், அலுவலகங்களில் சேரும் குப்பை, இந்த தொட்டியில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை ஊராட்சி துப்புரவு ஊழியர்கள், அப்புறப்படுத்துவது வழக்கம். இந்நிலையில், மேற்கண்ட குப்பைத்தொட்டியில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குப்பை நிரம்பி, கீழே விழுந்து கிடக்கிறது. இதனால், அங்கு குப்பை கொட்டுபவர்கள், தொட்டியின் அருகில் வீசி செல்கின்றனர். இதையொட்டி அப்பகுதியில் மலைபோல் குப்பை குவிந்து காணப்படுகிறது.