மதுராந்தகம், நவ.6: அச்சிறுப்பாக்கம் அருகே அதிகாரிகளை கண்டித்து, அண்ணங்கால் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேல்மருவத்தூர் அடுத்த கடமலைபுத்தூர் கிராமம் வழியாக ஒரத்தி, புறங்கால் கிராமம் முதல் அண்ணங்கால் கிராமம் வரை செல்லும் 3 கிமீ தார்ச்சாலை அமைந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக இந்தச்சாலை சீரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. லேசான மழை பெய்தாலும், சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் ஒன்றிய அலுவலகம் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள், இதுவரை சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தின் மழையின் காரணமாக அண்ணங்கால் கிராமத்தில் பழுதடைந்த சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல் ஆங்காங்கே காணப்படுகிறது. மேலும், சேறும் சகதியுமாக மாறியதால், நடக்க முடியாத சூழல் உள்ளது.