கோவில்பட்டி, நவ. 5: வெளிநாட்டு வேளாண் விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட கூடாது என வலியுறுத்தி கோவில்பட்டி, தூத்துக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிய பிராந்தியத்தில் உள்ள 44 நாடுகளில் இருந்து வேளாண் விளை பொருட்களை வரியின்றி இந்தியாவிற்குள் இயக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்ய மத்திய அரசு கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்கள் மற்றும் பால் பொருட்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கும் திட்டமாகும். எனவே இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட கூடாது. விவசாயத்திற்கு தட்டுப்பாடின்றி யூரியா டிஏபி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார் மாநில பொருளாளர் பெருமாள் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராமசுப்பு, மாவட்ட குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், முத்துமாரியப்பன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்தர், சங்கர், மாரியப்பன், பாலமுருகன், சங்கிலிபாண்டி, சீனிப்பாண்டி, துரைராஜ், சின்னச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.