மன்னார்குடி, நவ.1:மழைக்காலங்களில் மின்கம்பிகளுக்கு அருகே பட்டம் விடக்கூடாது என்று நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகி்மான கழகம் சார்பில் மழை காலங்களில் ஏற்படும் மின்விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மன்னார்குடியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் தலைமை வகித்தார். ஆர்டிஓ அலுவலகம் அருகே நடைபெற்ற பிரசார நிகழ்ச்சி மன்னார்குடி ஆர்டிஓ புண்ணியக்கோட்டி துவக்கி வைத்தார்.இதுகுறித்து நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் கூறுகையில், தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது. மற்றவர்களையும் தொட அனுமதிக்கக் கூடாது. உடனே அருகில் உள்ள மின்வாரியத்திற்கு தகவல் தர வேண்டும்.மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர் துணையோடு வெட்ட வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளை விளையாட விடக்கூடாது. குழந்தைகள் மின் கம்பிகளுக்கு அருகே பட்டம் விடக்கூடாது.