மன்னார்குடி, அக்.31:வடுவூர் பறவைகள் சரணாலயம் எதிரே உள்ள வளைந்த சாலையால் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வடுவூரில் ஏரி மற்றும் புகழ்பெற்ற பறவைகள் சரணா லயம் உள்ளது. ஏரியுடன் கூடிய சரணாலயம் மன்னார்குடி தஞ்சை நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து தங்கி செல்வது வழக்கம். எழில் கொஞ்சும் ரம்யமான சூழலில் அமைந்துள்ள சரணாலயத்தில் தங்கியுள்ள அரிய வகை பறவைகளை கண்டு ரசிக்க நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினம்தோறும் வருவது வழக்கம். அதேபோல் இந்த சாலையை கடக்கும் சுற்றுலா பயணிகள் இந்த ஏரியின் அருகே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு பறவைகளை கண்டு ரசிப்பதும், ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும் இயற்கை அழகை ரசிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.