கோவை, அக். 15: கோவை - பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தை அரசு, தனியார் பேருந்துகள் புறக்கணித்து மேம்பாலம் வழியாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கோவை -பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை திட்டத்தில், கிணத்துக்கடவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தில், இலகு ரக, கனரக வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்லவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மேம்பாலத்தின் மீது செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலாக பேருந்துகள் வழக்கம் போல் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக பேருந்து நிலையம் வந்து, பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால், சமீபகாலமாக இச்சாலையில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும்பாலும் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் வராமல், மேம்பாலத்தின் வழியாக, கோவை, பொள்ளாச்சி நோக்கி செல்கின்றன. இதனால், பஸ் ஸ்டாண்டில் கோவை, பொள்ளாச்சி செல்லும் பயணிகள், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.