ஈரோடு, அக் 10: தேசிய ஹேண்ட் பால் போட்டிக்கு ஈரோடு அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் தமிழக அணி வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான தேசிய அளவிலான ஹேண்ட் பால் போட்டி அடுத்த மாதம் புது டில்லியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழக அணிக்கான வீராங்கனைகள் தேர்வு போட்டி ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலைய விளையாட்டு மைதானத்தில் கடந்த 1ம் தேதி நடந்தது. இந்த போட்டியில் 8 மண்டலங்களில் இருந்து பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 72 மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். அதில், சிறப்பாக விளையாடிய 16 பேர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அரசு மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த, காவியா, மாலதி, திவ்யா, மைத்ரா ஆகிய நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.