வாலாஜாபாத், அக்.2: வாலாஜபாத் ஒன்றியம், ஏகனாம்பேட்டை ஊராட்சியில் உள்ள பஸ் நிறுத்தம், குடிமகன்களுக்கு அந்தப்புறமாக மாறிவிட்டது என பயணிகள் புகார் கூறுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டை ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு வங்கிகள், மேல்நிலைப் பள்ளி, ஒன்றிய பள்ளி, அங்கன்வாடி மையம் உள்பட பல்வேறு அரசு த அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும், ஏகனாம்பேட்டை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், ஏகனாம்பேட்டை பஸ் நிறுத்தத்துக்கு வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கும், பல்வேறு பணிகளுக்காகவும் தினமும் சென்று வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஏகனாம்பேட்டையில் கான்கிரீட் தளத்திலான பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த நிழற்குடை தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும், அந்தப்புறமாகவும் மாறிவிட்டது. இரவு நேரங்களில் சிலர், பாலியல் உள்பட பல்வேறு சமூக விரேத செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.