மானாமதுரை, அக்.1: மானாமதுரை புதுபஸ்ஸ்டாண்டிற்குள் செல்லும் பஸ்கள் அவசரமாக இடதுபுறம் இருந்து வலதுபுறமாக திரும்புகின்றன. இதனால் பின்னால் வரும் வாகனங்கள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மானாமதுரை புது பஸ்ஸ்டாண்டு மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து மதுரை, ராமேஸ்வரம், கமுதி, விருதுநகர் உள்ளிட்ட நான்கு மார்க்கங்களில் இருந்தும் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்சில் செல்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ்ஸ்டாண்டிற்கு வருகின்றனர். மதுரை ராமேஸ்வரம் நான்குவழிச்சாலை பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் பைபாஸ் மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிவேகமாக பகல், இரவு நேரங்களில் பஸ்ஸ்டாண்டிற்குள் நுழைகின்றன. இந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் வாகனம் திரும்புவது பற்றி அறியாத பிறவாகனங்கள் பஸ்ஸ்டாண்டிற்குள் நுழைய முயலும் வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் இரவு நேரங்களில் இரண்டு நுழைவு வாயில்கள் அருகிலும் மின்விளக்குகள் இல்லாததால் வாகனங்கள் மோதிக்கொள்ளும் நிலை உள்ளது. மேலும் ரோட்டை கடக்க முயலும் பாதசாரிகளும் அடிபட்டு இறக்க வாய்ப்புள்ளது.