மாங்காடு பகுதியில் புதிய காவல் நிலையம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

குன்றத்தூர், செப்.20: குன்றத்தூர் அடுத்த மாங்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். மாங்காடு, சக்ரா நகர் பகுதியில் மாங்காடு பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயநல கூடத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாங்காடு காவல் நிலையம் செயல்பட்டது. போதிய இடவசதி இல்லாததாலும், மழைக் காலங்களில் மழைநீர் கட்டிடத்தின் உள்ளே ஒழுகுவதால் பல்வேறு வழக்கு தொடர்பான முக்கிய கோப்புகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் புதிய காவல் நிலையம் கட்டி கொடுக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மாங்காடு, பத்மாவதி நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக நடந்த புதிய காவல்நிலையம் கட்டும் பணி சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில், புதிய காவல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாங்காடு திறந்து வைத்தார். இதில் இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் சம்பத் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: