பண்ருட்டி, செப். 20: பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம் பகுதியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரும் பணி, பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எல்என்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அய்யனார் குளம், பூங்குணம் ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள், குளம் தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பயணியர் மாளிகையில் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீர் வரத்து வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. 60 சதவீத பணிகள் நடந்து முடிந்துள்ளது.