திருச்சி அரசு ஐடிஐயில் 60 கைதிகள் சேர்ப்பு 108 இடங்கள் காலியாக உள்ளதால் சிறைவாசிகளின் பட்டியல் சேகரிப்பு

வேலூர், செப்.19: திருச்சி மத்திய சிறை அரசு ஐடிஐயில் 60 கைதிகள் மட்டுமே சேர்ந்துள்ளனர் எனவே காலியாக உள்ள 108 இடங்களில் கைதிகளை சேர்ப்பதற்காக பட்டியல் சேரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனை பெற்று சிறையில் உள்ளோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக திருச்சி மத்திய சிறையில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் கடந்த 2015ம் ஆண்டு ஐடிஐ தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக சிறைவாசிகள் தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் பிட்டர் 21, கணினி ஆபரேட்டர் 52, எலக்ட்ரீஷியன் 21, டெய்லரிங் 42, வெல்டர் 32 என மொத்தம் 168 பேர் சிறை ஐடிஐயில் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர். 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு சேர்க்கை அனுமதி அளிக்கப்பட்டது.அக்டோபர் மாத இறுதிக்குள் சேர்க்கையை முடித்து, பயிற்சி வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் தமிழக சிறைகளில் தகுதியுள்ள கைதிகளை அரசு ஐடிஐக்களில் சேர்த்து கொள்ளலாம் என சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை செய்தது. அதில், புழல்-1, புழல்-2, மதுரை, வேலூர், சேலம், பாளையங்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 சிறைகளில் தகுதியுடைய மற்றும் ஐடிஐயில் சேர்ந்து பயில விருப்பமுள்ள கைதிகளின் பட்டியலை சேகரித்து பட்டியல் அனுப்ப சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி, தற்போது திருச்சி ஐடிஐயில் 60 கைதிகள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 108 இடங்கள் காலியாக உள்ளதால் அந்த இடத்தில் கைதிகளை சேர்ப்பதற்காக சிறைத்துறை நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, தற்போது 9 மத்திய சிறைகளில் உள்ள ஐடிஐ படிக்க தகுதியுள்ள கைதிகள் விவரங்களை சேகரித்து இம்மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: