காரைக்குடி, செப்.10: காரைக்குடி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களின் ஓரங்களில் குப்பைகள் மற்றும் செடிகள் மண்டி காணப்படுகின்றன. நகர் பகுதியில் மர்மகாய்ச்சல் ஆங்காங்கே பரவி வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட தெருக்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தினமும் 48 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் தினமும் குப்பை வாங்குவதற்கு என நகராட்சி சார்பில் 170க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். தவிர தனியார் வசம் குப்பை வாங்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத் தனியார் நிறுவனத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 120க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பை வாங்கும் பணியை செய்து வருகின்றனர். வீடுகளில் தினமும் சேகரமாகும் குப்பைகளை வாங்க வேண்டும். துப்புரவு பணிக்கு என நகராட்சி பகுதிகளை 9 டிவிசனாக பிரித்து இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தினமும் காலை நேரங்களில் ஒவ்வொரு டிவிசனுக்கு என ஒதுக்கப்பட்ட தெருக்களை சுத்தப்படுத்தி, குப்பையை வாங்க வேண்டும். பின்பு மதிய நேரங்களில் அனைத்து துப்புரவு பணியாளர்களும் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொரு வார்டாக குப்பைகளை அகற்றுதல், தெருக்களில் மண்டி கிடக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பணிகள் செய்ய வேண்டும்.