ஈரோடு, ஆக. 20: ரூ.27 லட்சம் வாடகை செலுத்தாததால் ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கடைகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோயிலுக்கு சொந்தமாக மேற்கு அனுமந்தராயன் கோயில் வீதியில் அப்பர்சாமி மடம் உள்ளது. இந்த மடத்திற்கு சொந்தமான 10 கடைகளை பல ஆண்டுக்கு முன்பு சொற்ப வாடகையில் ஜவுளி பிரஸ் பேல் குடோன் நடத்தும் ஜவுளி வர்த்தகர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இடத்தின் மதிப்பிற்கு ஏற்ப வாடகை தொகையை கணிசமாக உயர்த்தினர். உயர்த்தப்பட்ட வாடகை தொகையை ஏற்றுக்கொள்ளாத வாடகைதாரர்கள் கடந்த 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை நிர்வாகத்திற்கு வாடகை பாக்கியாக ரூ.27 லட்சம் நிலுவை வைத்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் கோவையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இணை ஆணையர், வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வருபவர்களை வெளியேற்றி கடைகளை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.