பவானி, ஜூன் 13: அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் ரூ.8.16 கோடி மதிப்பில் மலக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. செயல் அலுவலர் ஜனாநந்தன் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் ரூ.8.16 கோடியில் அமைக்க, கடந்த 30.1.2026-ல் பணியாணை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, ஒன்றிய அரசு 50 சதமும், 33 சதவீதம் மாநில அரசின் மானியமாகவும், 17 சதவீதம் பேரூராட்சி மானியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.8.16 கோடியில், பேரூராட்சியின் பங்களிப்பாக ரூ.1.04 கோடி வழங்குவது திட்ட பணியாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை அம்மாபேட்டை பேரூராட்சியில் செயல்படுத்துவது தொடர்பான சாத்திய கூறுகள், கருத்து கேட்பு கூட்டம், முன் அனுமதி, திட்ட செயலாக்கம் குறித்து எவ்வித கருத்துகளும் கேட்கப்படவில்லை. இத்திட்டக்கான மாதாந்திர பராமரிப்பு, பணியாளர் சம்பளம், போதிய நிதி ஆதாரம் உள்ளது குறித்து பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
