சென்னிமலை, ஜூன் 16: சென்னிமலையில் காஸ் பைப் லைன் அமைப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒன்றிய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் பைப் லைன் மூலம் காஸ் கொண்டு செல்வதற்காக பல்வேறு ஊர்களில் சாலை ஓரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. சென்னிமலை பகுதியிலும் சாலை ஓரங்களில் பல மாதங்களாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னிமலை தினசரி மார்க்கெட் அருகே காஸ் பைப் லைன் அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் தார் ரோட்டை பெயர்த்து ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டது.
ஆனால், அந்த பள்ளத்தை சரியாக மூடாததால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘தினசரி மார்க்கெட் அருகே பெருந்துறை செல்லும் ரோடு ஏற்கனவே குறுகலாக உள்ளது. இங்கு சாலை ஓரத்தில் பைப் லைன் அமைப்பதற்காக பள்ளத்தை தோண்டினார்கள். ஆனால் சரியாக மூடாததால் தோண்டப்பட்ட இடத்தில் தார் ரோட்டின் பாகங்கள் சிதைந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரில் வரும் வாகனங்களுக்காக வழி விடும்போது வாகனங்களுக்குள் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது.
அதனால் தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
