ஈரோடு, ஜூன் 9: திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தினசரி நான்கு விதமாக குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாடு முழுவதும் கடந்த ஏப்.1 முதல் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 அமல்படுத்தப்பட்டது.
உச்சநீதிமன்றமும் திடக்கழிவு மேலாண் விதியை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக, தன் உத்தரவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தெரிவித்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, கடந்த வாரம், குப்பையை நான்காக பிரித்து வழங்கு தொடர்பாக, கவுன்சிலர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகர் பகுதியில், குப்பையை நான்காக தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடையே மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
