தூத்துக்குடி, ஜூலை 23: சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகளில் உறிஞ்சப்படும் நிலத்தடி நீரை லாரிகளில் கொண்டுசென்று தொழிற்சாலைகளுக்கு விற்பதை தடைசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சேர்வைகாரன் மடம், கட்டாலங்குளம் கிராம விவசாயிகளும், ஊர் மக்களும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டுவந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர். மனு விவரம்:
சேர்வைகாரன்மடம், கட்டாலங்குளம் ஊராட்சி பகுதியில் விவசாயம் செய்து வரும் இடங்களுக்கு அருகில் சட்டவிரோதமாக அனுமதியின்றி சிலர் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து நிலத்தடி நீரினை உறிஞ்சி லாரிகள் மூலம் தூத்துக்குடி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு நிலத்தடி நீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருவதை தடைசெய்யவேண்டும். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டு 11 மாதங்களாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இதுவிஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிலத்தடி நீரை அனுமதியின்றி முறைகேடாக எடுத்து லாரிகளில் விற்பனை செய்வதை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யவேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.